மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெற்றதை ஒட்டி, வாண வேடிக்கையுடன் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்.
கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் பின்பற்றப்படுகிறது.
அந்தவகையில், அமலில் இருந்த மீன்பிடி தடைக்காலம் தற்போது முடிவடைந்தது. இதனையடுத்து தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து, வாண வேடிக்கையுடன் விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
61 நாட்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்த தாங்கள், நம்பிக்கையுடன் மீன்பிடிக்கும் பணியைத் தொடங்கியுள்ளதாக விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.