சர்வதேச விண்வெளி மையத்திற்கு வீரர்களை அழைத்துச் செல்லும் ஆக்சியம்-4 திட்டம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஆகியவை இணைந்து ஆக்சியம்-4 என்ற திட்டத்தின்கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு செல்கிறார். அவருடன் அமெரிக்கா, போலாந்தைச் சேர்ந்த 3 பேர் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் 4 வீரர்கள் செல்ல இருந்த பயணம், தொழில்நுட்ப கோளாறு மற்றும் மோசமான வானிலை காரணமாக 4வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. கடைசியாக கடந்த 11ஆம் தேதி ராக்கெட் ஏவப்பட இருந்த நிலையில் திரவ ஆக்சிஜன் கசிவு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டதும், புதிய தேதி அறிவிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதன்படி, சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களும் நாளை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொள்வார்கள் என இஸ்ரோ அறிவித்தது.
இந்நிலையில், சர்வதேச விண்வெளி மையத்திற்கு 4 வீரர்கள் மேற்கொள்ள இருந்த பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பயணம் வரும் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.