தஞ்சை சூரியனார் கோவில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை ஆய்வு செய்த பிறகே பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பாஜக தேசிய பொதுச்செயலாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சூரியனார் கோவில் ஊராட்சியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை, நான்கு நாட்களுக்கு முன்பாக, கடந்த 16ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளளார்.
ஆனால் கட்டிடம் திறக்கப்படுவதற்கு முதல் நாளே, இரண்டு அறைகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்து, அவசர அவசரமாக பேட்ச் வொர்க் செய்திருக்கிறார்கள். முதலமைச்சர் திறப்பு விழாவிற்கு பிறகு, தற்போது, மீண்டும் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. ஒட்டு மொத்தமாக பேட்ச் வொர்க்கில் கட்டப்பட்ட தரமற்ற கட்டிடத்தைத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் ஊராட்சி மன்ற ஊழியர்கள் யாரும் அந்த அறையில் இல்லாததால், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. ஆனால் எப்போது கட்டிடம் இடிந்து விழுமோ என்ற பயத்தில், இனி எப்படி ஊழியர்கள் அங்கிருந்து பணியாற்ற முடியும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
உடனடியாக, தரமற்ற முறையில் கட்டிடம் கட்டிய ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு சார்பில் இந்தக் கட்டிடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்த பிறகே, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.