மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
முருக பக்தர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் விதத்தில் மதுரையில் பிரம்மாண்ட மாநாடு வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்து முன்னணி சார்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதலமைச்சர் பவன்கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ள நிலையில் முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
முன்னதாக அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களைப் பக்தர்கள் தரிசித்து வரும் நிலையில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை, ஓய்வு அறை உள்ளிட்டவை சிறந்த முறையில் இந்து முன்னணி சார்பில் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் கர்ப்பிணிகள், முதியோர்களுக்குச் சக்கர நாற்காலி, தாய் பாலூட்டும் அறை உள்ளிட்டவையும் மாநாடு நடைபெற உள்ள இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.