ஆப்ரேஷன் சிந்தூர் -பாகிஸ்தானுடனான மினி போர் என்று சொல்லலாம். நான்கு நாட்கள் நடந்த இந்த போரில், இந்தியாவின் விரைவான வெற்றி, பாகிஸ்தானுக்குப் பேரழிவைக் கொடுத்தது. இதைத்தொடர்ந்து, இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDO, ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் என அடுத்த தலைமுறை ஆயுதங்களைத் தயாரிப்பதில் வெற்றிகரமாக பணியாற்றி வருகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2014 ஆம் ஆண்டு, முதல்முறையாக நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற பிரதமர் மோடி, தனது “மேக் இன் இந்தியா” கொள்கையை வெளியிட்டார். இதன் மூலம் மொபைல் போன்கள் முதல் போர் விமானங்கள் வரை அனைத்தையும் உள்நாட்டிலேயே தயாரிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும், வழிவகை செய்யப்பட்டது.
இராணுவ வலிமையில் உலகின் 4வது பெரிய நாடு என்ற பெருமையுடைய இந்தியாவின் சக்திவாய்ந்த போர் கருவிகள் எதிரி நாடுகளுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்குகின்றன. சீனா மற்றும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளும் இந்தியாவின் பிரம்மோஸ் போன்ற ஆயுதங்களைக் கண்டு அஞ்சுகின்றன.
உலகின் அதிவேக சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை பிரம்மோஸ் ரஷ்யாவுடன் இணைந்து உருவாக்கப்பட்டதாகும். இது இந்திய இராணுவத்தின் வேகமான மற்றும் மிகவும் ஆபத்தான ஆயுதங்களில் முதன்மையானதாகும். நிலம், கடல் அல்லது வான்வழியிலிருந்து ஏவப்படும் திறன் கொண்ட பிரம்மோஸ், நாட்டின் பாதுகாப்பு மற்றும் துல்லியமான தாக்குதல் திறன்களுக்குச் சான்றாக உள்ளது.
பிரம்மோஸ் வெறும் ஏவுகணை அல்ல. இந்திய ராணுவ வலிமையின் சின்னம், எல்லையைப் பாதுகாப்பதற்கான தீர்வு என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் பாராட்டியுள்ளார். அனைத்து விதமான வானிலைகளிலும், பகல் மற்றும் இரவு நேரங்களிலும் பயன்படுத்த முடிந்த பிரம்மோஸ் 21ஆம் நூற்றாண்டின் ‘பிரம்மாஸ்திரம்’ ஆகும்.
தற்போது பிரம்மோஸ் ஏவுகணை Su-30MKI இலிருந்து மட்டுமே ஏவ முடியும். நிலம் மற்றும் கடல் தளங்களில் இருந்து ஏவக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணைகளை நீர்மூழ்கி கப்பல்களிலிருந்தும் செலுத்தும் சோதனை முயற்சிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன.
Su-30MKI இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட பன்முக பயன்பாட்டுப் போர் விமானமாகும். எதிரி நாட்டு வானத்தைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் திறன் படைத்த Su-30MKI ரஷ்யாவின் சுகோய் நிறுவனத்தின் தயாரிப்பாகும். உலகின் மிகவும் ஆற்றல் மிக்க போர் விமானமான Su-30MKI யை இந்தியாவின் HAL நிறுவனம் தயாரித்து, இந்திய விமானப்படைக்கு வழங்குகிறது.
Su-30MKI தவிர மற்ற போர் விமானங்களுடன் இணைக்கக்கூடிய வகையிலும் பிரம்மோஸ் ஏவுகணை மேம்படுத்தப் பட்டு வருகின்றன.
இந்தியா தனது முதல் நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் மேம்பாட்டுச் சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. DRDO உருவாக்கிய இந்த ஏவுகணை,1,500 கிமீக்கும் அதிகமான தூரங்களுக்குப் பல்வேறு வெடிமருந்துகள் மற்றும் அணுஆயுதங்களைச் சுமந்து செல்லும் நோக்கம் கொண்டதாகும்.
மேலும்,1,000 வினாடிகளுக்கு மேல் ஸ்க்ராம்ஜெட் உந்துவிசை திறனையும் DRDO நிரூபித்துள்ள நிலையில், இந்தியாவின் ஹைப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையை உருவாக்கும் முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அனைத்து மேம்பாட்டுச் சோதனைகளும் முடிக்கப்பட்டு, முப்படைகளில் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. ஏற்கெனவே Astra Mk-1 A2A BVR ஏவுகணைகளைத் தயாரித்த DRDO, இப்போது நீண்ட தூர Astra Mk-2 மற்றும் Astra Mk-3 Air-to-Air ஏவுகணைகளையும் உருவாக்கி வருகிறது. Mig-29K, Tejas Mk-2 மற்றும் AMCA stealth போர் விமானங்களில் பயன்படுத்தும் வகையிலும் இந்த ஏவுகணைகள் மேம்படுத்தப் பட உள்ளன.
மேலும், Anti-Radiation ஏவுகணையான RudraM-I, விரைவில் RudraM-2, RudraM-3 மற்றும் RudraM-4 என DRDO விரிவுபடுத்தி வருகிறது. 2025 மே மாத நிலவரம் படி, உலகில் மூன்று நாடுகள் மட்டுமே ஐந்தாம் தலைமை போர் விமானங்களைக் கொண்டுள்ளன. அமெரிக்காவிடம் F-22 மற்றும் F-35, சீனாவிடம் J-20, ரஷ்யாவிடம் Su-57 ஆகிய ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் உள்ளன.
பெங்களூருவை தளமாகக் கொண்ட ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி, உலகளாவிய தொழில்துறை கூட்டாளர்களுடன் இணைந்து, Advanced Medium Combat Aircraft போர் விமானத்தை உருவாக்கி வருகிறது.
AMCA என்பது Aeronautical Development Agencyயின் ஒரு லட்சியத் திட்டமாகும். இது இந்திய விமானப்படையின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட 5-வது தலைமுறை உள்நாட்டுப் போர் விமானமாகும். மேம்பட்ட நடுத்தர ஐந்தாம் தலைமுறை போர் விமானம், விமானத் துறையில் ஆத்ம நிர்பர் திட்டத்தின் முக்கிய மைல்கல் என்று கூறப்படுகிறது.
2020ம் ஆண்டு எல்லையில் சீனாவுடனான மோதலைத் தொடர்ந்து, இந்தியாவின் DRDO, L & T உடன் இணைந்து, Zorawar இலகு ரக பீரங்கிகளை வெறும் 24 மாதங்களில் தயாரித்து சாதனை படைத்துள்ளது. விரைவில் 350 Zorawar இலகுரக பீரங்கிகளை இந்திய இராணுவத்துக்கு DRDO வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாகவே, ஆயுத தளவாடங்களுக்கு இறக்குமதிகளை இந்தியா நம்பியிருந்தது. ஆனால் இன்று, துப்பாக்கி,துப்பாக்கி குண்டுகள் தொடங்கி பிரம்மோஸ் ஏவுகணை வரை அதிநவீன தொழில்நுட்பத்துடன் இந்தியா உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது.
“மேக் இன் இந்தியா” திட்டத்தின் கீழ் பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைவதற்கு DRDO-யின் பங்கு முக்கியமானதாகும்.