சிந்துநதி நீர் ஒப்பந்தம் ஒருபோதும் புதுப்பிக்கப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஊடகமொன்றின் நேர்காணலில் பேசிய அமித்ஷா, அமைதி மற்றும் முன்னேற்றத்தைத் தொடர்ந்து மீறும் பாகிஸ்தானுக்குப் பதிலளிக்கும் விதமாக 1960-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மோடி அரசாங்கம் நிறுத்தி வைத்ததாகத் தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு நியாயமற்ற முறையில் பாயும் நீர், இனி ராஜஸ்தான் போன்ற இந்திய மாநிலங்களுக்குக் கால்வாய் மூலம் திருப்பி விடப்படும் எனவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமித்ஷா, நியாயமற்ற முறையில் பெற்று வந்த சிந்து நதி நீரின்றி பாகிஸ்தான் இனி பசியால் வாடும் எனவும் தெரிவித்தார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியைக் குலைப்பதற்காகப் பாகிஸ்தானால் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சியே பஹல்காம் தாக்குதல் எனக் குற்றம் சாட்டிய அமித்ஷா,
பாகிஸ்தானின் தீய திட்டத்தை உணர்ந்த காஷ்மீர் இளைஞர்கள் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முன்னெப்போதும் இல்லாத வகையில் போராட்டங்கள் மூலம் ஒற்றுமையை வெளிப்படுத்தினர் எனவும் கூறினார்.