மா விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தமிழக அரசு முன்வரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி கிருஷ்ணகிரியில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 14 ஆயிரம் ஹெக்டேர் அளவில் மாங்காய் சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு மாங்காய் விவசாயத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும், கொள்முதல் விலை கிலோவுக்கு 3 முதல் 4 ரூபாய் மட்டுமே கிடைப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இதனை ஈடு செய்வதற்காகக் கொள் முதல் விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும், ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளைத் தமிழக அரசிடம் மா விவசாயிகள் முன் வைத்தனர்.
இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுகவினர் கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மா விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என அதிமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.