புதுச்சேரி சாரம் பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சப் பணத்தை எண்ணிய சார்பதிவாளரின் வீடியோ வைரலான நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
புதுச்சேரி சாரம் பகுதி காமராஜர் சாலையில் அமைந்துள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஸ்ரீகாந்த் என்பவர் சார் பதிவாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் பத்திரப்பதிவு செய்வதற்காக லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் வாங்கிய லஞ்சப் பணத்தைக் கழிவறையில் வைத்து சார்பதிவாளர் ஸ்ரீகாந்த் எண்ணியுள்ளார்.
பின்னர் விரைந்து பத்திரப்பதிவு செய்து தருவதாக லஞ்சம் கொடுத்தவர்களிடம் கூறியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், சார்பதிவாளர் ஸ்ரீகாந்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து புகாரளிக்கப்படும் பட்சத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே லஞ்சப் பணத்தை எண்ணிய சார்பதிவாளரின் வீடியோ வைரலாகி வருகிறது.