கோவை மாவட்டம் முத்து நகர் பகுதியில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வசிக்கும் மக்களுக்குப் பட்டா வழங்க மறுப்பதாகப் புகார் எழுந்துள்ளது. நீதிமன்றத்தில் சாதகமான உத்தரவு கிடைத்த போதிலும் அவர்களுக்குப் பட்டா வழங்க மறுப்பதாகத் தமிழக அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை மாவட்டம் முத்துநகர் பகுதியில் சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவில் நூற்றுக்கும் அதிகமான நரிக்குறவர் சமூக மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். குடிநீர், மின்சாரம், சாலை போன்ற அடிப்படை வசதிகள் கோரி பலமுறை மனு வழங்கியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நீதிமன்றத்தை நாடி தங்கள் பகுதிக்கான மின்சாரத்தை நரிக்குறவ சமூக மக்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக பெற்றனர். கால் நூற்றாண்டுக்கும் மேலாக தாங்கள் வசித்து வரும் பகுதியிலேயே பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இன்று வரை நிறைவேறாமலே இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
அடிப்படை வசதிகள் தொடங்கி வீட்டு மனைப் பட்டா வரை தங்களுக்குத் தேவையான ஒவ்வொன்றையும் நீதிமன்றத்தையே நாடி பெறும் அளவிற்கு அப்பகுதி நரிக்குறவ சமூக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பட்டா வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற வழக்கிலும் தங்களுக்கு ஆதரவான தீர்ப்பு கிடைத்த பின்பும் கூட அரசு நிர்வாகம் அதனைச் செய்து தர மறுப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
குடிநீர், கழிவறை, சாலை என அத்தியாவசிய வசதிகள் கூட முறையாக இன்றி சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை தவித்து வரும் நிலையில் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு மாவட்ட நிர்வாகமோ, தமிழக அரசோ இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது அச்சமூக மக்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது
சமூகநீதியின் அங்கம் திராவிட மாடல் அரசு எனப் பல கோடி ரூபாய் செலவு செய்து விளம்பரம் செய்யும் அரசு, அதில் சிறிதளவு தொகையை ஒதுக்கி நரிக்குறவ சமூக மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தருவதோடு, அவர்கள் வசிக்கும் இடத்திலேயே பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.