திருவண்ணாமலை அருகே தவெக-வினரின் ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கிய மாவட்டச் செயலாளரை, விஜய் மக்கள் இயக்க நிர்வாகி இடித்துத் தள்ளி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே விஜய்-யின் 51-வது பிறந்தநாள் விழா, வடக்கு மாவட்ட தவெக நிர்வாகிகள் சார்பில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
குறிப்பாக மாவட்டச் செயலாளர் சத்யா தலைமையில் 151 பெண்கள் அண்ணா சிலை அருகேயுள்ள அங்காளம்மன் கோயிலில் இருந்து பால் குடம் ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர். அப்போது அங்கு வந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஹரிஷ், மாவட்டச் செயலாளர் சத்யாவைத் தள்ளிவிட்டதுடன் நிகழ்ச்சி குறித்து தனக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அவரை சக நிர்வாகிகள் சமாதானம் செய்ய முயன்ற போது, பொதுச்செயலாளர் ஆனந்த் காலில் விழுபவர்களுக்கு மட்டுமே பதவி கிடைக்கும் எனவும், உழைப்பவர்களுக்கு எதுவும் கிடைக்காது என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.