தமிழ்நாட்டில் 9 ஆட்சியர்கள், 7 மாநகராட்சி ஆணையர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வணிகவரி-பதிவுத்துறை அரசு செயலாளராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதவள மேலாண்மைத்துறை அரசு செயலாளராக சி.சமயமூர்த்தியும், உயர்கல்வித்துறை செயலாளராக சங்கரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். போக்குவரத்துத் துறை செயலாளராக லில்லியும், நிதித்துறை சிறப்புச் செயலாளராக வெங்கடேஷும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் சென்னை சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலாளராக கோ.பிரகாஷை நியமித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆவடி மாநகராட்சி ஆணையராக ரா.சரண்யாவும், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பானோத் ம்ருகேந்தர் லாலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வெ.சரவணன், திருச்சி மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு ஆட்சியராக சினேகாவும், மதுரை ஆட்சியராக கே.ஜே.பிரவீன்குமாரும் நியமிக்கப்பட்ட நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவும், ஈரோடு மாவட்ட ஆட்சியராகக் கந்தசாமியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் ஆட்சியராக துர்கா மூர்த்தியும், பெரம்பலூர் ஆட்சியராக அருண்ராஜும் நியமிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டு தமிழக அரசு, விருதுநகர் ஆட்சியராக சுகபுத்ராவும், சிவகங்கை ஆட்சியராகப் பொற்கொடியும் நியமிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.