புகார் கொடுக்கச் சென்ற பட்டியலினத்தவரை அவமதித்த நொளம்பூர் காவல் ஆய்வாளருக்கு எதிராக இரு வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடிக் குடியிருப்பு நலச் சங்கத்தினருக்கு எதிரான புகாரை ஏற்காமல் நொளம்பூர் காவல் ஆய்வாளர் அவமானப்படுத்தியதாக வானமாமலை என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, வெள்ளை சட்டையுடன் வருபவர்களுக்குச் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் காவல்துறை, அழுக்கு சட்டையுடன் புகார் அளிக்க வருபவர்களை அவமதிப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.
புகார் அளிக்கக் காவல்நிலையத்திற்கு வந்த பட்டியலினத்தவரை நாற்காலியில் அமரக் கூடாது எனத் தெரிவிக்க காவல்துறையினருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என்று கூறிய நீதிபதி, மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுச் செயல்படும் காவல்துறை புகார் கொடுக்க வந்தவர்களைப் பாரபட்சமாக நடத்தி அவமதிக்கலாமா? எனத் தமிழ்நாடு காவல்துறைக்குச் சரமாரி கேள்வி எழுப்பினர்.
அப்போது, சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது 2 வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 15-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.