வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணை 5 மாவட்டங்களின் விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணை 63 அடியை எட்டியதால், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வைகை பூர்வீக பாசன பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பூர்வீக பாசனப்பகுதி நிலங்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கரையோரங்களில் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிப்பதற்கு இறங்க வேண்டாம் என்றும், வைகைஆற்றை கடக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.