ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி வீரர் சுபன்ஷு சுக்லா 7 முக்கியமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார். அவற்றில் முக்கியமான ஆராய்ச்சியாகக் கருதப்படும் விண்வெளியில் விவசாயம் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
நாசாவின் ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் தங்கி பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா உட்பட 4 பேர் பால்கன் 9 ராக்கெட்டின் டிராகன் விண்கலம் மூலம் விண்ணுக்குப் புறப்பட்டுள்ளனர்.
விண்ணில் நிலைத்தன்மையுடன் மனிதன் வாழ்வது எப்படி என்பது தொடர்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகள் இந்த பயணத்தின் போது மேற்கொள்ளப்பட உள்ளன. விண்வெளியில் நுண்ணீர்ப்பு தொடர்பாக இந்திய ஆய்வு நிறுவனங்கள் மேற்கொண்ட 7 சோதனைகளை விண்ணில் சுக்லா ஆய்வுக்கு உட்படுத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் ககன்யான் மற்றும் இந்திய விண்வெளி மையம் தொடர்பான திட்டங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் சுபன்ஷு சுக்லாவின் இந்த பயணம் மற்றொரு முக்கியமான ஆய்வையும் மேற்கொள்ள ஏதுவாக அமைந்திருக்கிறது.
விண்வெளியில் விதைகள் முளைப்பதற்கான ஆய்வு தான் அது. விண்வெளியில் ஈர்ப்பு விசையின் தாக்கம் கிட்டத்தட்ட இல்லாத நிலையில், விதை எப்படி முளைக்கும் ? விண்வெளியில் வளரும் தாவரங்களின் தன்மை என்னவாக இருக்கும் என்பது போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கூடிய வகையில் ஆக்ஸியம் 4 திட்ட உறுப்பினர்கள் பல்வேறு வகையிலான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர்
சந்திரன், செவ்வாய் போன்றவற்றிற்கான நீண்ட பயணங்களின் போது காய், கனிகள் போன்ற உணவுப் பொருட்கள் அவசியமானதாக அமைந்திருக்கிறது. அதோடு நீண்ட பயணங்களின் போது குப்பிகளிலும், பொட்டலங்களாகவும் பதப்படுத்தப்பட்ட உணவை மட்டுமே சார்ந்திருக்க முடியாது என்பதால் விண்வெளி விவசாயம் விண்வெளி வாழ்வாதாரத்திற்கும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே விண்வெளியில் புதிய ஊட்டச்சத்து நிறைந்த உணவை உறுதி செய்யத் தாவர வளர்ப்பு எனும் புதிய உத்தியை விஞ்ஞானிகள் கையாளத் தொடங்கியுள்ளனர்.
நீண்டநாள் விண்வெளி பயணத்தின் போது பயணிகளின் எலும்பு செறிவு குறைந்த போவதற்கும் வாய்ப்பிருப்பதால், அதன் தேய்மானத்தைத் தடுத்து நிறுத்தும் புரதம் நிறைந்திருக்கும் லெட்யூஸ் எனும் தாவரத்தை ஏற்கனவே விண்வெளியில் வளர்த்து சோதனையும் செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் ஊட்டம் தரும் மருந்துகளை எடுத்துச் செல்வதற்குப் பதிலாக தங்களுக்குத் தேவையான நுண் ஊட்டங்களை அங்கேயே வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.
விண்வெளியில் விவசாயம் என்பதைச் சாத்தியமாக்கும் முயற்சியில் ஆக்ஸியம் 4 பயணம் மிக முக்கிய பங்காற்றப் போகிறது. விண்வெளியில் வளர்க்கப்படும் வெந்தயம் மற்றும் பயிறு முளைகளை, பூமியில் வளர்க்கப்படும் முளைகளுடன் ஒப்பிட்டு, விண்வெளி முளைகள் உண்ண பாதுகாப்பாக இருக்குமா? அதில் ஏதேனும் தீங்குகள் விளைவிக்கும் நச்சுகள் இருக்குமா என்பது குறித்து சோதனை நடைபெற உள்ளது.
மேலும் உணவுப்பயிர் விதைகளின் மீதான நுண்ணீர்ப்பு விசையின் தாக்கம் எனும் ஆய்வையும் மேற்கொண்டு ஆறு வகைப் பயிர்களின் விதைகள் விண்வெளி சூழலுக்கு உட்படுத்தப்பட்டு பூமிக்குக் கொண்டு வரப்பட உள்ளது. .
இந்த விதைகளில் இருந்து வரும் முதல் தலைமுறை பயிரைக் கொண்டு அடுத்த தலைமுறையை உருவாக்கும் திட்டமும் உள்ளது. இப்படி அடுத்தடுத்த தலைமுறையின் விதையை உருவாக்கி விண்வெளியில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் விளைச்சலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
சந்திரன், செவ்வாய் போன்ற கிரகங்களில் எதிர்கால குடியிருப்புகளை ஏற்படுத்துவதற்கு முன் விண்வெளியில் தாவரங்கள் எப்படி வளரும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
பூமிக்கு அப்பால் திறம்ப விவசாயம் செய்வதற்குத் தேவையான அடிப்படை ஆய்வுக்கு உதவும் ஆக்ஸியம் 4 பயணத் திட்டம் ராசாவுக்கு மட்டுமல்ல இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்தில் ஏற்பட்ட புரட்சியைப் போலவே, விண்வெளியிலும் விவசாய புரட்சியை நிகழ்த்துவதற்கான நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.