கேரளாவில் 950க்கும் மேற்பட்ட பெயர்களைக் கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பட்டியலை என்ஐஏ மீட்டுள்ளது.
தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி மத்திய அரசின் உத்தரவின்படி 2022ஆம் ஆண்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீது வழக்குப்பதிவு செய்த என்ஐஏ, அதே ஆண்டு கேரளாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கையும் இணைத்து விசாரணை மேற்கொண்டது.
இந்த வழக்கு தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட 950க்கும் மேற்பட்டோரின் பெயர் பட்டியலை என்ஐஏ நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
அதில், 51வது குற்றவாளி சிராஜுதீனிடமிருந்து கைப்பற்றப்பட்ட எட்டு ஆவணங்களில் பிற சமூகங்களைச் சேர்ந்த 240 பேரின் பட்டியலைக் கைப்பற்றியதாகவும், இந்தப் பட்டியலில் முன்னாள் மாவட்ட நீதிபதி ஒருவரின் பெயரும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாட்சியாக மாறிய ஒரு குற்றவாளியிடம் இருந்து 232 பெயர்கள் கொண்ட பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல், 69வது குற்றவாளியான அயூப் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 500 பேரின் பெயர்கள் கொண்ட பட்டியல் மீட்கப்பட்டதாகவும், 2022ல் பீகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முகமது ஜமாலுதீனிடமிருந்து ‘இந்தியா 2047’ என்ற தலைப்பில் ஆறு பக்க ஆவணத்தை மீட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதே PFI இன் நிகழ்ச்சி நிரல் என்றும், ஸ்ரீனிவாசனின் கொலை இந்த பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும் எனவும் என்ஐஏ சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.