வால்பாறையில் சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இது சகஜமான விஷயம்தான் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறிய பதில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் தாய்லாந்தில் யானைகள் முகாமில் சிறப்பு பயிற்சி பெற்ற வன காவலர்களுக்கு பாராட்டும் சான்றிதழும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம், வால்பாறையில் சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது விலங்குகள், யானைகள் தாக்குவது சகஜமான விஷயம் தான் என கூறியதால் அதிர்ச்சியடைந்த செய்தியாளர்கள், ஒரு உயிரிழப்பு விவகாரத்தில் அலட்சியமாக பதில் சொல்கிறீர்களே என்றனர்.
இதனால் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.