கன்னியாகுமரியில் காதல் விவகாரத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் திமுக தலையீடு காரணமாக தற்கொலை என போலீசார் பேட்டி கொடுத்துள்ளதாக இளைஞரின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.
குலசேகரம் அருகே காவுவிளை பகுதியை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர் கோவையில் தாய் மற்றும் தங்கையோடு தங்கி ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் பள்ளியில் படிக்கும் போது குலசேகரம் கல்வெட்டாங்குழி பகுதியை சேர்ந்த ஷமீரா என்ற இஸ்லாமிய பெண்ணை காதலித்து வந்து உள்ளார். இந்நிலையில் ஷமீராவுக்கு மாப்பிள்ளை பார்ப்பதை அறிந்த தனுஷ், தனது தந்தையிடம் கூறி பெண் கேட்க சென்றுள்ளனர்.
அப்போது சாதியை காரணம் காட்டி தனுஷூக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 19 தேதி ஷமீராவின் வீட்டின் மொட்டை மாடியில் தனுஷ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார். அவரது உடலை கிராம நிர்வாக அதிகாரியோ, பெற்றோரோ வரும் முன் போலீசார் கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டிய நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வரும் முன் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின், தற்கொலை என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தனுஷின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
தனுஷ் காதலித்த பெண்ணின் தந்தை திமுகவை சேர்ந்தவர் என்பதால் போலீசார் அவசர கதியில் தற்கொலை என கூறுவதால் உரிய விசாரணை நடத்த கோரி பாஜக சார்பில் போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.