இமாச்சலப்பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக 5 பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமான அதீத கனமழை பெய்தது. பியாஸ் ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் தர்மசாலா நீர்மின் திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 20 தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதில் இரண்டு தொழிலாளர்கள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள தொழிலாளர்களைத் தேடும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, குலு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக 3 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், பஞ்சார் பகுதியில் மேக வெடிப்பு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மண்டி பகுதியில் உள்ள பண்டோ அணை முழு கொள்ளளவை எட்டியதால் 3 மதகுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மோசமான வானிலை காரணமாக நாளை வரை சிம்லாவில் விமானச் சேவை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.