அமெரிக்கத் தளங்கள் மீதான ஈரானின் தாக்குதல் ‘அமெரிக்காவிற்குக் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய அடி’ என ஈரான் உச்ச தலைவர் கமேனி குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் – இஸ்ரேல் இடையே போர் முடிவுக்கு வந்த பின் முதல் முறையாக, ஈரான் உச்ச தலைவர் ஆயத்தொல்லா அலி கமேனி இஸ்ரேலுடனான போரில் ஈரான் வெற்றிபெற்றதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் சியோனிச ஆட்சி இஸ்லாமியக் குடியரசின் தாக்குதல்களால் கிட்டத்தட்ட வீழ்த்தப்பட்டு நசுக்கப்பட்டுள்ளதாக கமேனி தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க ஆதிக்க ஆட்சியை வீழ்த்தி வெற்றி பெற்றதற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறியுள்ள அவர், சியோனிச ஆட்சி வீழ்த்தப்படும் என்பதை அறிந்து போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக நுழைந்த அமெரிக்காவும் இதுவரை எதையும் சாதிக்கவில்லை என விமர்சித்துள்ளார்.
மேலும், அமெரிக்கத் தளங்கள் ஈரானால் தாக்கி சேதப்படுத்தப்பட்டது, இஸ்லாமியக் குடியரசால் அமெரிக்காவிற்குக் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய அடி எனவும், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தால் அமெரிக்கத் தளங்கள் மீது மீண்டும் தாக்குதல் நிகழ்த்தப்படும் என்றும் ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தங்கள் மீதான தாக்குதலுக்கு எதிரிகள் மிகப்பெரிய விலையைக் கொடுக்க நேரிடும் என எச்சரித்துள்ள அவர், முன்னதாக “ஈரான் சரணடைய வேண்டும்” எனக் குறிப்பிட்ட அமெரிக்க அதிபரின் வார்த்தைகள் தேவையற்றது எனவும் கமேனி தெரிவித்துள்ளார்.