தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி உறுதி என்றும், அதில் பாஜக அங்கம் வகிக்கும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தமிழ் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பிரதமர் மோடி அரசின் மிகப்பெரிய சாதனை என்பது, முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தியாவின் வளர்ச்சியை உறுதிப்படுத்தியது என தெரிவித்துள்ளார்.
2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது, நிர்வாகம் சீரழிந்து கிடந்ததாகவும், உள்நாட்டு பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமாக இருந்ததாகவும் அமித்ஷா கூறியுள்ளார். மொத்தத்தில் பலவீனமான ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தது எனக்கூறியுள்ள அவர், தற்போது அந்த காட்சி முழுமையாக மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி உறுதி என்றும், அதில் பாஜக அங்கம் வகிக்கும் எனவும் அமித்ஷா தெரிவித்தார். தமிழகத்தில் அதிமுக தலைமையின் கீழ் பாஜக போட்டியிடும் எனக்கூறிய அவர்,
முதலமைச்சர் பதவிக்கு அதிமுகவில் இருந்தே தேர்வு செய்யப்படுவார் என்று தெளிவுப்படுத்தினார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை பாஜகவினர் ஒன்றிணைக்கவில்லை என்றும், உட்கட்சி விவகாரத்தில் அதிமுகவினரே முடிவு செய்ய வேண்டும் எனவும் அமித்ஷா கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இணையுமா என்ற கேள்விக்கு, தேர்தலுக்கு இன்னும் போதுமான காலஅவகாசம் இருப்பதாகவும், சில காலங்கள் காத்திருங்கள், அனைத்து தெளிவாகிவிடும் என மத்திய அமைச்சர் அமித்ஷா பதிலளித்தார்.