கோவை அருேக ஈக்கள் தொல்லை காரணமான கோழிப்பண்ணையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
பச்சார்பாளையத்தில் இயங்கி வரும் கோழி பண்ணையில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து வெளியேறும் கழிவுகளால் அதிகளவிலான ஈக்கள் உற்பத்தியாகின்றன.
இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் உணவு, தண்ணீர் என அனைத்திலும் ஈக்கள் மொய்ப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், கோழி பண்ணையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து சென்ற கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்டோர் ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதனையடுத்து அங்கிருந்து கலைந்து சென்ற கிராம மக்கள், ஈக்களால் குழந்தைகள் தொடர் நோய்த்தொற்றுக்கு ஆளாவதுடன், வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.