தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் விவசாய நிலத்தில் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாவட்ட தலைவரைப் போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி வரையிலான சாலை குறுகிய சாலையாகவும், அதிக வளைவுகள் கொண்டதாகவும் இருந்ததால் அதனை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் சாக்கோட்டை பகுதியில் உள்ள விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அதற்கான இழப்பீட்டை வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் சாலை பணிகளைத் தடுத்து நிறுத்திய விவசாயிகள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த பாஜக மாவட்ட தலைவர் சதீஷ்குமார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அங்குப் பணியில் இருந்த போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து சிறையிலடைத்தனர்.
இதற்குக் கண்டனம் தெரிவித்த பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் போராட்டம் கைவிடப்பட்டது.