பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 7 முதல் ஆகஸ்டு 26ஆம் தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொறியியல் கலந்தாய்வுக்கு மொத்தம் 3 லட்சத்து 2 ஆயிரத்து 374 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகக் கூறினார்.
அதில், 2 லட்சத்து 50 ஆயிரத்து 298 பேர் பதிவுக்கட்டணம் செலுத்தி உள்ளதாகவும், 2 லட்சத்து 41 ஆயிரத்து 641 மாணவர்களுக்குத் தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 47 ஆயிரத்து 372 மாணவர்களுக்குத் தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில் காஞ்சிபுரத்தை சேர்ந்த சகஸ்ரா என்ற மாணவி முதலிடத்தை பிடித்தாகவும், நாமக்கலைச் சேர்ந்த கார்த்திகா 2வது இடமும், அரியலூரைச் சேர்ந்த அமலன் ஆண்டோ என்ற மாணவர் 3ஆம் இடம் பிடித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் கடலூரைச் சேர்ந்த தரணி என்ற மாணவி முதலிடம் பிடித்தாகவும், சென்னையைச் சேர்ந்த மைதிலிக்கு 2வது இடமும், கடலூரைச் சேர்ந்த முரளிதரன் என்ற மாணவருக்கு 3வது இடமும் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 7ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 26ஆம் தேதிவரை நடைபெறும் என்றும், 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7, 8ஆம் தேதிகளில் நடைபெறும் எனவும் கூறினார்.
பொது பிரிவினருக்கான சிறப்பு இடஒதுக்கீடு கலந்தாய்வு ஜூலை 9 முதல் 11ஆம் தேதிவரை நடைபெறும் என்றும், பொது கலந்தாய்வு ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 19ஆம் தேதிவரை நடைபெறும் எனவும் குறிப்பிட்டார்.
துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 21 முதல் 23ஆம் தேதி வரையும், கலந்தாய்வு முழுவதும் இணையதளம் வாயிலாக நடைபெறும் எனவும் அவர் கூறினார். மேலும், கடந்த ஆண்டு கடைபிடிக்கப்பட்ட கட்டண முறை, நடப்பாண்டும் தொடரும் என அமைச்சர் கோவி செழியன் தெரிவித்தார்.