புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமார் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
புதுச்சேரியில் அமைச்சர்களை மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததற்கான கடிதத்தை முதலமைச்சர் ரங்கசாமியிடம் வழங்கினார்.
இதுதொடர்பாக பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, சரவணகுமார் அளித்த கடிதத்தை துணை நிலை ஆளுநரிடம் கொடுத்ததாகவும், அந்த கடிதத்தை ஆளுநர் ஏற்றுக் கொண்டதாக கூறினார்.
இதனிடையே புதுச்சேரியில் பாஜக கட்சி பணி செய்வதற்காக மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாகவும், காலியாக உள்ள நியமன உறுப்பினர்கள் பதவி வரும் ஒன்றாம் தேதிக்குள் நிரப்பப்படும் என சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.