சிவகங்கையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார் என்பவர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை போலீசார் கடுமையாக தாக்கியதாக அவரது சகோதரர் தெரிவித்ததை குறிப்பிட்ட எல்.முருகன், காவல்துறையினர் என்ன மனநிலையில் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை திமுக அரசு விளக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
அப்பாவியான அஜித்குமார் மரணத்திற்கு தமிழக காவல்துறையும், தமிழக அரசும், தார்மீகப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள எல்.முருகன், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டுமென்று வலியுறுத்தி உள்ளார்.