அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்கத் தயார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக ஒரே இரவில் மிகப் பெரிய வான்வழித் தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது.
477 ட்ரோன்கள் மற்றும் 60 ஏவுகணைகள் உட்பட மொத்தம் 537 வான்வழி ஆயுதங்களை ரஷ்யா வீசியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் தாக்குதலை முறியடிக்கும் போது F-16 விமானி மக்ஸிம் உயிரிழந்தார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உலக நாடுகளின் அமைதிக்கான அழைப்புகளை மீறி புதின் நீண்ட காலத்திற்குப் போரை நடத்த முடிவு செய்துள்ளார் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் தங்களுக்குப் பாதுகாப்பு தேவை எனவும் கூறியுள்ளார்.
ஏவுகணைகளிடம் இருந்து பாதுகாக்க அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்கத் தயார் எனக் கூறியுள்ள ஜெலன்ஸ்கி அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அனைத்து நட்பு நாடுகளும் ஆதரவு தர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.