மக்களின் பிரச்சனைகளைப் பேச வேண்டிய மாமன்ற கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்து நேரத்தைக் கழித்த உறுப்பினர்களின் செயல் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. 200 கவுன்சிலர்கள் பங்கேற்க வேண்டிய இந்த கூட்டத்தில் மிகவும் குறைந்த அளவிலான உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
இதனால் இருக்கைகள் காலியாக காட்சி அளித்த நிலையில் அரங்கமும் வெறிச்சோடியே காணப்பட்டது. கடந்த முறையும் இதே போலப் பல உறுப்பினர்கள் பங்கேற்காமல் இருந்த போது அனைத்து உறுப்பினர்களும் காலை 10 மணிக்குள் மாமன்ற கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என மேயர் உத்தரவிட்டார்.
ஆனால் இன்றைய கூட்டத்தில் ஒரு சில உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றதால் மேயர் பிரியாவின் உத்தரவை கவுன்சிலர்கள் காற்றில் பறக்க விட்டனர் என சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
ஆனாலும் கூட்டத்தில் பங்கேற்ற சில உறுப்பினர்களும் உரையைக் கவனிக்காமல் செல்போனில் மூழ்கியபடியும், ரீல்ஸ் பார்த்தும் நேரத்தைக் கழித்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மிகக் குறைவான அளவில் மட்டுமே உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில் மக்கள் பிரச்சனைகளைப் பேச வேண்டிய இடத்தில் ரீல்ஸ் பார்த்த செயல் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.