ஆப்ரேஷன் சிந்தூரில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்ட ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பை வாங்குவதற்குப் பிரேசில் விருப்பம் தெரிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. பதிலுக்குப் பாகிஸ்தான் இந்தியாவின் ராணுவத்தளங்கள் மற்றும் முக்கிய நகரங்களை குறிவைத்து 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் ஏவியது. ஆனால்,அவை எல்லாவற்றையும் நடுவானிலேயே இடைமறித்து இந்தியா சுட்டு வீழ்த்தியது.
செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பான ஆகாஷ்தீர், நிகழ் நேரத்தில் செயல்பட்டு, ஒவ்வொரு அச்சுறுத்தலையும் துல்லியத்துடன் கண்காணித்து, பகுப்பாய்வு செய்து, மிகச் சரியாகத் தாக்கி அழித்தது.
ஆகாஷ்தீர், மற்ற போர் விமானங்களைப் போல் சத்தமிடவில்லை. மற்ற ஏவுகணைகளைப் போல ஒளியை ஏற்படுத்தவில்லை. ஆனாலும் இருண்ட வானில் விழிப்புடன் நிற்கும் போர்வீரனாகச் செயல்பட்டது. எதிரியின் ஒவ்வொரு ட்ரோன்,போர் விமானம் மற்றும் ஏவுகணையைத் துல்லியமாகக் கவனித்து மிகச் சரியாகக் கணக்கிட்டு துல்லியமாகத் தாக்கி அழித்தது.
ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் 100 சதவீதம் துல்லியத்தை நிரூபித்த ஆகாஷ்தீர், இந்திய வான்வெளிக்கு ஒரு பாதுகாப்பு கவசமாகச் செயல்பட்டது. மற்ற நாடுகளின் வான் பாதுகாப்பு அமைப்புகளை விடவும் மிக வேகமாகக் கண்காணித்து,மிக வேகமாக முடிவெடுத்து மிக வேகமாகத் தாக்கியது. தரையில் நிரந்தரமாக இருக்கும் ரேடார்களை போல் இல்லாமல். நகரும் விதத்திலான வாகன அடிப்படையில் ஆகாஷ்தீர் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டளை,தகவல்தொடர்பு,கம்ப்யூட்டர்,செயற்கை நுண்ணறிவு என அனைத்து கட்டமைப்புகளுடன் ஒருங்கிணைத்துச் செயல்படும் ஆகாஷ் தீர் முப்படைகளுடனும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. நவீன போர்க்கள உத்தியையும் மறுவரையறை செய்த ஆகாஷ்தீர் உலகம் இதுவரை கண்டிராத புத்திசாலித்தனமான அசுரன் என்று பாராட்டப்பட்டது.
DRDO உருவாக்கிய ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு அமைப்பு,, 45 கிலோமீட்டர் தூரத்திலேயே ட்ரோன்கள் மற்றும் குரூஸ் ஏவுகணைகளைக் குறிவைத்து அழிக்கிறது. இது நடுத்தர தூரத் தரையிலிருந்து ஏவும் வான் ஏவுகணை தளமாகும். மேக் 3.5 வேகத்துடன் செயல்படும் இந்த அமைப்பில் Rajendra 3D radar array பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரே நேரத்தில் 64 இலக்குகளைக் கண்காணிக்கும் திறன் கொண்டதாகும்.
இந்திய விமானப்படையில் எட்டு ஆகாஷ் வான் அமைப்புக்களும் உள்ளன. ராணுவத்தில் ஆகாஷ்-1S மற்றும் புதிய ஆகாஷ்-NG – ஆகிய இரண்டு அமைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் “சுதர்சன் சக்ரா” என்று அழைக்கப்படும் ரஷ்யாவின் S-400 Triumf இருந்தாலும் ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு அமைப்பின் செயல்பாட்டு வெற்றி, உலகையே வியந்து பார்க்க வைத்துள்ளது.
இதன்காரணமாக, இந்தியாவின் பாதுகாப்பு திறன்களில், குறிப்பாகத் தகவல் தொடர்பு அமைப்புகள், கடல் ரோந்து கப்பல்கள் மற்றும் கருடா பீரங்கி துப்பாக்கி உள்ளிட்ட பாதுகாப்பு சார்ந்த இருதரப்பு ஒத்துழைப்புக்குப் பிரேசில் தீவிர ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பை வாங்கப் பிரேசில் விருப்பம் தெரிவித்துள்ளது
இந்நிலையில், பிரேசிலில் நடக்கும் BRICS பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, நமீபியா ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்கிறார். கடந்த 10 ஆண்டுகளில்,ஒரு இந்தியப் பிரதமரின் மிக நீண்ட இராஜதந்திர பயணம் இதுவாகும். இதன் மூலம் உலகளாவிய தெற்கு நாடுகளுடன் இந்தியாவின் உறவு வலிமைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.