மின்தடையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நீட் மறுதேர்வு நடத்த உத்தர விடக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வின் போது சென்னையில் பெய்த மழை காரணமாக மின்தடை ஏற்பட்டதால் சரியாக எழுத முடியவில்லை எனக் கூறி 13 மாணவர்கள் உட்பட 16 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நாடு முழுவதும் 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ள நிலையில், மறுதேர்வு நடத்தினால் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவர்கள் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் ஏற்கனவே தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்த மனு மீண்டும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக நிரூபிக்காத வரை மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என்றும், மறு தேர்வு நடத்த உத்தரவிட்டால் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் தீர்ப்பு வழங்கினர்.
மேலும், மின்தடையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிடக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.