நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கோரியதால் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது.
சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்தில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் ருக்மாங்கதன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஐந்தாவது மண்டலமான ராயபுரத்தில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
2021 டிசம்பரில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் நேரில் ஆஜரானார்.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறவில்லை என்றும், நடந்த தவறுக்கு முழுப்பொறுப்பு ஏற்பதாகவும் மாநகராட்சி ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தனர்.
ராயபுரம் பகுதியில் விதிமீறல் கட்டடங்கள் குறித்து நோட்டீஸ் அனுப்பியது தொடர்பான விவரங்களை மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், விதிமீறல் கட்டடங்கள் தொடர்பான விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்யுமாறும் ஆணையிட்டனர்.