வேலைக்குப் பணம் பெற்ற விவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பில் சில பத்திகளை நீக்கக்கோரிய விவகாரத்தில், செந்தில் பாலாஜி தரப்பு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
வேலைக்குப் பணம் பெற்ற விவகாரத்தில், கடந்த 2022-ல் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பில் சில பத்திகளை நீக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் ஆஜராகவில்லை.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் வேறு ஒரு வழக்கில் ஆஜரானதால், வழக்கை ஒத்திவைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த், மனுவை இரவு முழுவதும் படித்துவிட்டு வந்தால் ஒத்திவைக்க கோருகிறீர்களா என அதிருப்தி தெரிவித்தார். பின்னர் வழக்கு வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.