கண்டம் விட்டு கண்டம் தாண்டி சுமார் 12,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய ((Ultra Long-Range Strike Aircraft)) புதிய குண்டுவீச்சு விமானத்தை இந்தியா உருவாக்கி வருகிறது. இது, உலகளாவிய பெரும் ராணுவச் சக்தியாக இந்தியா முன்னேறுவதை எடுத்துக்காட்டுகிறது என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
நவீன காலத்தில் போர்க்களமும், அதற்கான போர் ஆயுதங்களும் மாறிவருகின்றன. குறிப்பாக வான்வழி போர், நீண்ட தூர வான்வழித் தாக்குதல்கள், சைபர் தொழில்நுட்பத்துடன் கூடிய அதிவேக ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புக்கள் என மாறிவரும் போரின் தன்மைக்கு ஏற்ப போர் ஆயுதங்களும் நவீனமாகி வருகின்றன.
அமெரிக்காவின் B-2 Spirit stealth bomber மற்றும் B-21 Raider stealth bomber போன்ற அதிநவீன குண்டுவீச்சு விமானங்களுக்கு இணையான விமானத்தை H -20 என்ற பெயரில் தயாரிக்க நீண்ட காலமாகவே சீனா முயற்சி செய்து வருகிறது. அதே சமயத்தில், இந்தியா தனது அணுசக்தித் திறனை வான் படையிலும் சேர்க்கும் பணிகளைத் தீவிரப் படுத்தியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, ரஷ்ய விமானப்படையின் மிகவும் மேம்பட்ட குண்டுவீச்சு விமானங்களில் ஒன்றான Tu-160 ‘பிளாக்ஜாக்’ சூப்பர்சோனிக், குண்டுவீச்சு விமானம் போல அதிநவீன குண்டு வீச்சு விமானத்தை இந்தியா தயாரிக்க முடிவெடுத்துள்ளது. ரஷ்யாவின் Tu-160 ‘பிளாக்ஜாக்’ சூப்பர்சோனிக் குண்டுவீச்சு விமானம், வழக்கமான வெடி குண்டுகளையும் அதற்கும் மேல், அணு ஆயுதங்களையும் ஏந்திச் சென்று வீசும் ஆற்றல் கொண்டதாகும்.
மணிக்கு 2,200 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக்கூடிய இந்த விமானம், பறக்கும்போதே தன் இறக்கைகளை வெவ்வேறு கோணங்களில் மாற்றியமைக்கும் திறன் கொண்டதாகும். இது அதிக வேகத்திலும், குறைந்த வேகத்திலும் சிறப்பாகப் பறக்கும் இந்த விமானத்தில் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், 12,300 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பாலும் பறக்க முடியும்.
எனவே, ரஷ்யாவின் Tu-160 ‘பிளாக்ஜாக்’ குண்டு வீச்சு விமானத்தின் வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் வரம்பு ஆகியவற்றை இந்தியாவின் புவிசார் அரசியல் நோக்கங்களுடன் ஒத்துப்போகும் வகையில் மாற்றியமைப்பதாக DRDO அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் B-21 Raider stealth குண்டு வீச்சு விமானத்தை விட அதிக தூரம் பறக்கக் கூடிய விமானத்தை இந்தியா தயாரிக்கிறது. radar dodging, stealth தொழில்நுட்பம் மற்றும் தானியங்கி விமான அமைப்புகள் என பல்வேறு நவீனத் தொழில்நுட்பங்களுடன் இந்தியா உருவாக்கி வருகிறது.
இந்தியாவின் புதிய கண்டம் விட்டு கண்டம் தாவி அழிக்கும் Ultra Long-Range Strike Aircraft குண்டுவீச்சு விமானம் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், சுமார் 12,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. மேலும், இந்தியாவின் குண்டு வீச்சு விமானம், சுமார் நான்கு பிரம்மோஸ்-NG க்ரூஸ் ஏவுகணைகள் உட்பட 450 கிலோமீட்டர் எல்லைவரை சென்று தாக்கக் கூடிய சூப்பர்சோனிக் ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும்.
அக்னி-1P, லேசர் குண்டுகள் மற்றும் கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணைகள் போன்ற குறுகிய தூர பாலிஸ்டிக் ஆயுதங்களும் இறுதி பேலோடின் ஒரு பகுதியாக இந்த குண்டு வீச்சு விமானத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, எதிரி நாட்டு விமான தளங்கள், ரேடார் வான் பாதுகாப்பு அமைப்புக்கள்,, கட்டளை மையங்கள் மற்றும் அணுசக்தி தளங்களைத் துல்லியமாகவும் விரைவாகவும் தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும்.
9,300 கிலோமீட்டருக்கு மேல் பயணித்தாலே அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாக அழிக்க முடியும். ஒருபடி மேலே சென்று, ஒரு முறை எரிபொருள் நிரப்பினாலே 12,000கிலோமீட்டருக்கு மேல் சென்றுதாக்கும் வல்லமையுடன் இந்தியா இந்த புதிய குண்டு வீச்சு விமானத்தைத் தயாரிக்கிறது.
DRDO, HAL மற்றும் ADA ஆகியவற்றுடன் இணைந்து மத்திய அரசு இந்த வெற்றிகரமான பணியைத் தொடங்கியுள்ளது. ரஷ்யா மற்றும் பிரான்சுடன் தொழில்நுட்பம் பரிமாற்ற ஒப்பந்தங்களும் ஏற்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. குறிப்பாக, GE-414 அல்லது ரஷ்யாவின் NK-32 எஞ்சின்கள் பயன்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவின் இந்த பாய்ச்சல், பாதுகாப்புத் துறையில் ஒரு முக்கியமான மைல்கல் ஆகும்.