மகளிர் உலகக்கோப்பை செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சரித்திரமிக்க சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக். செஸ் உலக வரலாற்றில் முதன்முறையாக இந்திய வீராங்கனைகள் இருவர் தேர்வானதும் குறித்தும் அவர்கள் கடந்து வந்த பாதை குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
தற்போதைய Fide கிளாசிக் ரேட்டிங்கில், ஓபன் பிரிவில் முதல் 10 இடங்களில் 3 இந்தியர்கள் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். உலக சாம்பியன் பட்டமும் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷிடம் இருக்கும் நிலையில் நாளுக்கு நாள் இந்தியர்களின் ஆதிக்கம், உலக செஸ் விளையாட்டில் பெரிய முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது.ஓபன் பிரிவில் ஆடவர் அசத்தும் அதே நேரம், நம் மகளிர் வீராங்கனைகளின் சாதனை இன்னும் நம்மைப் பெருமை அடையச் செய்துள்ளது.
செஸ் ஒலிம்பியாட் மட்டுமல்ல, அனைத்து விதமான தொடர்களிலும் இந்தியப் பெண்களின் வளர்ச்சி மற்றும் வெற்றி விகிதம் உயர்ந்துக்கொண்டே இருக்கின்றது. மகளிர் செஸ் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியா, கோப்பை வெல்வதற்கான ஒரு வாய்ப்பை மட்டுமல்ல, இரண்டு வாய்ப்புகளை வசப்படுத்தியது. ஹம்பியை பொறுத்தவரை ஆந்திரப் பிரதேசம் குடிகலாவை சேர்ந்தவர். 2002ம் ஆண்டு இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற மிகப்பெரும் பெருமைக்கும் சொந்தமானவர் ஆவார்.
2002ல் தனது 15 வயதில் உலக இளம் மகளிர் சாம்பியன் பட்டம், 2019ல் Fide Women’s Rapid Chess சாம்பியன் பட்டம், 2020 இல் ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வெற்றி பெற்ற போது அதில் முக்கிய பங்காற்றியவர் மற்றும் women’s world chess சாம்பியன்ஷிப்பில் பலமுறை தன் சாதனைப் பயணத்தை தொடர்ந்தவர் ஹம்பி.
இவரது திறமை மற்றும் முயற்சிக்காக இந்தியாவின் நான்காவது உயரிய சிவில் விருதான பத்மஶ்ரீ விருதினை கடந்த 2007 ஆம் ஆண்டு இவர் பெற்றதன் மூலம் இந்தியாவில் செஸ் விளையாட்டில் கால்தடம் பாதிக்கும் மகளிருக்கு பெரும் நம்பிக்கையாக விளங்கியவர். திவ்யா தேஷ்முக்கை பொறுத்தவரை இந்தியாவின் 21 வது women கிராண்ட் மாஸ்டர் ஆவார். 2022 இந்தியச் சதுரங்க மகளிர் சாம்பியன், 2023 இல் ஆசியச் சதுரங்க சாம்பியன் மற்றும் அதே வருடம் இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டமும் பெற்றவர்.
இதுவரை மகளிர் செஸ் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியர்கள் இறுதிப் போட்டி வரை சென்றதே இல்லை என்ற நிலையில், முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் 19 வயது இளம் வீராங்கனை திவ்யா. காலிறுதி சுற்றில் இந்தியாவின் பலம் வாய்ந்த ஹரிகா துரோணவல்லியை வீழ்த்தியும், அரையிறுதிப் போட்டியில் சீனாவைச் சேர்ந்த முன்னாள் மகளிர் உலக சாம்பியன் டான் ஜாங்கியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முதல் இந்தியர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரானார்.
அவரை தொடர்ந்து அடுத்ததாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் அனுபவம் மிகுந்த இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி. இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் திவ்யா வெள்ளை காய்களுடனும், ஹம்பி கருப்பு காய்களுடனும் களமிறங்கவே, போட்டி டிராவில் முடிந்தது. இரண்டாம் சுற்றில் ஹம்பி வெள்ளை நிற காய்களுடனும், திவ்யா வெள்ளை நிற காய்களுடனும் களமிறங்கினர், அதுவும் சமனில் நிறைவுற்றது. இறுதியாக உலகக் கோப்பையை வெல்லப் போவது யார் என்ற முடிவு, டை பிரேக்கர் மூலம் தீர்மானிக்கும் சூழல் ஏற்பட்டது.
டை பிரேக்கர் பொறுத்தவரை முதலில் 15 நிமிடங்கள் கொடுக்கப்படும், அதில் முதல் நகர்வில் இருந்து 10 நொடிகள் போனசாக வழங்கப்படும். இரண்டு டை பிரேக்கர் போட்டிகளும் சமனில் முடிந்தால் அடுத்தது 10 நிமிட டை பிரேக்கர், முதல் நகர்வில் 10 நொடிகள் போனசாக வழங்கப்படும் இவ்வாறாக, 5, 3 என முடிவு தெரியும் வரை போட்டி சென்றுக்கொண்டே இருக்கும்.
ஆனால் திவ்யா கோனேரு ஹம்பி இடையேயான முதல் 15 நிமிட டை பிரேக்கர் டிராவில் முடிவுற்றது. அடுத்ததாக நடைபெற்ற இரண்டாவது 15 நிமிட டை பிரேக்கர் போட்டியில் திவ்யா தேஷ்முக் வெற்றிக்கான வாய்ப்பை தக்கவைத்ததன் மூலம் அதனைப் பயன்படுத்தி அசத்தினார்.
முதல் மகளிர் உலகக் கோப்பையையும் முத்தமிட்டார் இந்த இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக். தோல்வியுற்ற கோனேரு ஹம்பி இரண்டாம் இடத்தையும், சீனாவின் டான் ஜாங்கி மூன்றாவது இடமும் பிடித்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் செஸ் வீராங்கனைகளுக்கு மட்டுமல்ல, உலக செஸ் வீராங்கனைகளுக்கே எதிர்காலத்தில் மிரட்டல் கொடுக்கும் வீராங்கனையாக உருவெடுத்துள்ளார் திவ்யா.
இளம் வயதிலேயே இத்தகைய திறமையுடன் கூடிய திவ்யா, தற்போது இந்தியாவின் 4 வது பெண் கிராண்ட் மாஸ்டர் பட்டமும் பெற்றுள்ளார் என்பதும், உலக தரவரிசையில் 15 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. திவ்யா தேஷ்முக்கின் இந்த வெற்றி நிச்சயம் இந்திய இளம் பெண்களைச் சதுரங்கத்தில் சாதிக்கப் பெருமளவில் ஊக்குவிக்கும் என்பதில் எவருக்கும் எள்ளளவிலும் ஐயமில்லை.