திமுக ஆட்சியில் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கினால் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனம்பள்ளி பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரு அரசுப்பள்ளி மாணவிகள், மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி, கல்லூரி மாணவி என நான்கு பேருக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.
வயது வித்தியாசமின்றி மனநலம் குன்றிய சிறுமியைக் கூட பாலியல் ரீதியாக வேட்டையாடுமளவிற்கு தமிழகத்தில் குற்றவாளிகளுக்கு குளிர்விட்டுப் போய்விட்டது என்பதைத் தான் இந்த சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அதுசரி, கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவள்ளூரில் பள்ளிச் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்த குற்றவாளியின் சிசிடிவி அடையாளங்கள் தெரிந்தும் அவனைக் கைது செய்ய வாரக்கணக்கில் எடுத்துக் கொண்ட திமுகவின் ஏவல்துறையைக் கண்டால் குற்றவாளிகள் பயப்படுவார்களா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
திமுக ஆட்சியில் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கினால் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள் என்பதை நாமும் பலமுறை எடுத்துக் கூறிவருகிறோம், பல போராட்டங்களையும் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், போராட்டக்காரர்களை எப்படி அடக்கி ஒடுக்கி பொய் வழக்கு போடலாம் என்பதிலும் மற்ற மாநிலங்களில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி பேசி திசைத்திருப்புவதிலும் அக்கறையுடன் செயலாற்றும் திமுக அரசு, பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் கோட்டை விட்டுவிடுகிறது.
ஆக, இனி இந்த உதவாத அரசையோ அல்லது கட்டப்பஞ்சாயத்து காவல்துறையையோ நம்பி பயனில்லை. நமது வீட்டுப் பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு நாம் தான் பொறுப்பு. வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும், தமிழகப் பெண்களின் கண்ணியம் காக்கப்படும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.