நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நெல்லை கேடிசி நகரில் ஐடி நிறுவன ஊழியரான கவின் என்ற இளைஞர் கடந்த 27 ஆம் தேதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில், அவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவரது பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டு, இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவின் உடலை வாங்குவோம் எனக் கூறி பெற்றோரும் உறவினர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டதால் கவினின் உடலை பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்த நிலையில் 5 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் நிறைவு பெற்றது.
இதையடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் கவினின் உடலுக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து கவினின் உடலை பெற்றோரும் உறவினர்களும் பெற்றுக் கொண்டனர்.