அரசின் திட்டங்களிலும், திட்டங்கள் குறித்த விளம்பரங்களிலும் முதலமைச்சரின் பெயரையோ அல்லது முன்னாள் முதலமைச்சரின் பெயரையோ பயன்படுத்தக்கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்த விளம்பரத்தில் முதலமைச்சரின் பெயரையும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படத்தையும் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதிமுக மக்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவைச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, சுந்தர் மோகன் ஆகியோர் விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர்.
இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் அரசு விளம்பரங்களில் முதலமைச்சரின் புகைப்படத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும்முதலமைச்சரின் பெயரையும், கட்சியின் கொள்கை தலைவர்களின் புகைப்படத்தையும், மற்றும் முன்னாள் முதலமைச்சர் புகைப்படத்தையும் பயன்படுத்துவது முரணானது எனவும் தெரிவித்தனர்.
அரசுத் திட்டத்தில் அரசியல் தலைவர்களின் பெயர்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த நீதிபதிகள் அரசுத் திட்டத்தில் ஆளும் கட்சியின் பெயர், சின்னத்தைப் பயன்படுத்துவது உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு விரோதமானது எனத் தெரிவித்தனர்.
எனவே அரசுத் திட்டங்களில் முதலமைச்சரின் பெயர் மற்றும் முன்னாள் முதலமைச்சரின் புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிப்பதாகத் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தேர்தல் ஆணையம் விசாரிக்க இந்த வழக்கு தடையாக இருக்காது எனவும் தெளிவுபடுத்தினர்.