சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகப் பெறப்பட்ட புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்யச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், பொன்முடிக்கு எதிராகப் பெறப்பட்ட 115 புகார்களில் 71 புகார்கள் முடித்து வைக்கப்பட்டுச் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
மேலும், 40 புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து புகார்தாரர்களுக்குத் தபால் மூலம் தகவல் அனுப்பப்பட்டதாகவும், 4 புகார்கள் ஆன்லைன் மூலமாகவே முடித்து வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து உரியவர்களிடம் ஒப்புகை பெறப்பட்டதா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கை வரும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.