நடிகை மீரா மிதுனை கைது செய்து வரும் ஆகஸ்ட் 11-ம் தேதிக்குள் முன்னிறுத்தச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட வழக்கில் நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் கடந்த 2021-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத மீரா மிதுனுக்கு எதிராக கடந்த 2022-ல் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் 3 ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமறைவாக உள்ள நிலையில், டெல்லி வீதிகளில் சுற்றித் திரியும் மீரா மிதுனை மீட்க வேண்டும் என கோரி அவரது தாய் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், டெல்லி போலீசாரால் பிடிக்கப்பட்ட மீரா மிதுன், அங்குள்ள அரசு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, டெல்லி காப்பகத்தில் உள்ள மீரா மிதுனை கைது செய்து ஆகஸ்ட் 11-ம் தேதி ஆஜர்படுத்தும்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.