ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் அப்பாவி உயிர்கள் பலி ஆவது தொடர் கதையாகி வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், சென்னை கண்ணகி நகரில் தேங்கியிருந்த மழைநீரில், மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததால், பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர் பலியான சம்பவம் மனதை பதைபதைக்க வைக்கிறது. இறந்த தூய்மைப் பணியாளர் திருமதி. வரலட்சுமி அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இந்த கனத்த தருணத்தில் ஒரு கட்சித் தலைவர் என்பதைத் தாண்டி, சாதாரண குடிமகனாக மனதில் ஆயிரம் கேள்விகள் எழுகின்றன. ஒரு நாள் மழைக்கே ஓர் அப்பாவி உயிர் பலியாகும் அளவிற்கு, ஒரு மாநிலத் தலைநகரின் நிர்வாகம் சீர்கெட்டு உள்ளதா? அதிலும் சென்னையில் மின்கம்பி அறுந்து விழுந்து, கடந்த 7 வாரங்களில் மட்டும் 5 உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளதைப் பார்க்கையில், ‘விடியல் ஆட்சியில்’ மின்சார வாரியம் விழித்துக் கொண்டு தான் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆகஸ்ட் மழைக்கே சென்னை அல்லாடுகிறது என்றால் டிசம்பரில் தலைநகரின் கதி என்ன? மழைநீர் தேங்கினால் என்ன, மின்சாரம் பாய்ந்தால் என்ன, தெருவில் நடந்து செல்லப்போவது ஏழை, எளிய மக்கள் தானே, எக்கேடு கெட்டால் என்ன என்ற அலட்சிய எண்ணமா? என்றும் அவர் வினவியுள்ளார்.
‘தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு சென்னை’ என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின் இதயத்தின் மீது விழும் எலெக்ட்ரிக் ஷாக்கையும் கவனிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மறைந்த தூய்மைப் பணியாளரின் குழந்தைகள் அழும் கதறலொலியைக் கேட்ட பின்பாவது, விளம்பரத்தையும் சமூக வலைத்தளத்தையும் விட்டு வெளியே வந்து, இது போல மேலும் பல உயிர்கள் காவு வாங்கப்படுவதைத் தடுக்கும் விதமாக, மழைக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.