பிரதமர் மோடி சுதந்திர தின உரையின்போது கூறியதுபோல் 56-வது ஜிஎஸ்டி கூட்டமானது, நாட்டு மக்கள் அனைவருக்குமான சிறந்த தீபாவளி பரிசாக அமைந்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முன்பிருந்த நான்கு விதமான ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைகளானது நீக்கப்பட்டு, 5 மற்றும் 18 சதவீத வரி என்ற அடிப்படையில் இரண்டு அடுக்குகளாக மட்டுமே இனி செயல்பாட்டிலிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அடிப்படைத் தேவைகளில் ஒன்றான பால் மற்றும் ரொட்டி, தனிமனித மருத்துவக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு போன்றவற்றிக்கும் ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளித்திருப்பது மிகுந்த வரவேற்பிற்குரியது என்று தெரிவித்தார்.
கல்வி, விவசாயம், மருத்துவம் மற்றும் அடிப்படைத் தேவைகள் என்று அனைத்து வகையிலும் நாட்டு மக்களின் நலனறிந்து, ஜிஎஸ்டி வரி முறையை சீர்செய்துள்ளதாகவும் கூறிய அவர், ஜிஎஸ்டி வரி மீதான அடுத்த தலைமுறை சீர்திருத்த நடவடிக்கை மேற்கொண்டு, மிகச் சிறப்பானதொரு தீபாவளி பரிசினை அறிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு நன்றினை தெரிவித்துக்கொள்வதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் பதிவிட்டுள்ளார்.