கோயிலின் உட்பிரகார மண்டபத்தில் வாத்தியம் இசைக்க அனுமதியில்லை என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை வட மதுரையில் உள்ள விருந்தீஸ்வரர் கோயிலின் உட்பிரகார மண்டபத்தில் கொம்பு முரசு, உறுமி, சங்கு, பறை, ஜமாப், சிவ வாத்தியம் போன்றவை இசைக்க அனுமதியில்லை என்று வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை அதிர்ச்சியளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
இந்துக்களின் பக்தி என்பது இசையோடு பின்னி பிணைந்தது என்றும், இசையால் இறைவனை எழுந்தருளச் செய்வது, உறங்க செய்வது போன்ற மரபுகள் இன்றளவும் தொடர்கின்றன எனவும் கூறியுள்ளார்.
இந்துக்களின் பக்தி இசையை போற்றி வளர்க்க வேண்டிய அறநிலையத்துறை, அழித்து வருவது வேதனைக்குரியது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்து கோயில்களின் பாரம்பரியங்களை ஒவ்வொன்றாக அழிக்க நினைக்கும் தமிழக அரசு, தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர்,
அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள எல்லாக் கோயில்களிலும், ஏற்கனவே உள்ள நடைமுறைப் பழக்கங்களை மாற்றக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இசை வாத்தியங்கள் முழங்க தமிழக அரசு தடை விதிக்கக்கூடாது எனவும் காடேஸ்வரா சுப்ரமணியம் வலியுறுத்தியுள்ளார்.