நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 46.
தனியார் தொலைக்காட்சியின் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் ரோபோ சங்கர். மாரி, இரும்புத்திரை உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப்பின் உடல்நலம் தேறி வீடு திரும்பினார்.
கடந்த சில தினங்களுக்கு முன், படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயக்கமடைந்த ரோபோ சங்கரை படக்குழுவினர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரோபோ சங்கர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.