வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் வால்பாறையில் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊட்டி, கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து, நீதிமன்ற உத்தரவின்படி சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.
இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, அரசு போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய இடைக்கால அறிக்கைகளை அந்நிறுவனங்கள் தாக்கல் செய்தன.
இதனையடுத்து ஐஐடி – ஐஐஎம் குழுவினருக்குத் தேவையான தகவல்களை வழங்க ஏதுவாகத் தலைமைச் செயலாளர்த் தலைமையில் விரைவில் கூட்டம் கூட்ட வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது ஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளதால், வால்பாறையில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருவதாக நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம், வால்பாறைச் செல்லும் அனைத்து வழிகளிலும் சோதனைச் சாவடிகளை அமைத்து, வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், வால்பாறைச் செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்பது குறித்தும் சோதனை நடத்த உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 31-ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்தது.