தவெக தலைவர் விஜய்க்கு வருமானத்தை மறைத்ததற்காக ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்தது சரிதான் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கடந்த 2016-17 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்த விஜய் வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என்பதை கண்டறிந்தது.
மேலும் வருமானத்தை மறைத்ததற்காக நடிகர் விஜய்க்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காலதாமதமாக அபராதம் விதிக்கப்பட்டதால் அதனை செல்லாது என ரத்து செய்ய வேண்டுமென தெரிவித்தார்.
வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வருமான வரிச் சட்டப்படி விஜய்-க்கு அபராதம் விதித்தது சரிதான் என்றும், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை அக்டோபர் 10 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.