கடந்த 11 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வரும் மின்னணு உற்பத்தி நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு 1.15 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய முதலீட்டு திட்டங்கள் அரசுக்கு வந்துள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு
ஒரு மாதத்துக்கு முன், ‘செமிகான் இந்தியா 2025’ தொடக்க விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, செமிகண்டக்டர் திட்டத்தின் மூன்றாவது கட்டத்தில் 18 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள 10 செமிகண்டக்டர் திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், இந்தியாவின் மிகச்சிறிய சிப், உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
மேலும், ஒற்றைச் சாளர அனுமதி, செமிகண்டக்டர் பூங்காக்களுக்கான ‘Plug and Play’ உட்கட்டமைப்புகள், திறமையான தொழிலாளர் தொகுப்பு, உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைகள், வடிவமைப்புடன் இணைக்கப்பட்ட மானியங்கள் மற்றும் முழுமையான திறன்களை மேம்படுத்தும் திட்டங்களை மேற்கோள் காட்டி உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு வலுவான அழைப்பு விடுத்திருந்தார் பிரதமர் மோடி.
இந்த நிலையில், செமிகண்டக்டர் அல்லாத மின்னணு உதிரி பாகங்களின் உற்பத்தியில் கவனம் செலுத்தும் திட்டத்துக்குக் கடந்த மார்ச் 28ஆம் தேதிபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி எதிர்கால மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டத்தை (ECMS) அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு அறிவித்தது. 59,350 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்ப்பது, 4,56,500 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தியை விரிவாக்குவது, 91,600 பேருக்குக் கூடுதல் நேரடி வேலைவாய்ப்பு மற்றும் பல மறைமுக வேலைகளை உருவாக்குவது ஆகியவை இந்தத் திட்டத்தின் அடிப்படை யாகும்.
இறக்குமதி சார்புநிலையைக் குறைத்து, தொழில்துறையின் அடித்தளத்தை வலிமையடையதாக்கும் வகையில், நாட்டில் மின்னணு கூறுகளை உற்பத்தி செய்வதற்கான வலுவான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவது இத்திட்டத்தின் முதல் நோக்கமாகும். உள்நாட்டு உற்பத்தித் துறையைச் சர்வதேச விநியோகச் சங்கிலிகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் உலகளாவிய மின்னணு வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கை விரிவுபடுத்துவது இத்திட்டத்தின் இரண்டாவது நோக்கமாகும்.
மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தித் திட்டத்தில், A, B, C மற்றும் E பிரிவுக்கான விண்ணப்ப காலக்கெடு கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 1,15,351 கோடி ரூபாய் முதலீட்டு திட்டங்களுக்கான 249 விண்ணப்பங்களை அரசு பெற்றுள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
D பிரிவுக்கான சாளரம் 2027 ஏப்ரல் 30ஆம் தேதி வரைக்கும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில் அதிகமான விண்ணப்பங்கள், எதிர்பார்க்காத அளவுக்கும் மேல் முன்மொழியப்பட்ட முதலீடுகளின் மதிப்பு, ஆகியவை, இந்தியாவின் நிலையான அரசு மற்றும் வெளிப்படையான கொள்கை முடிவு குறித்த முதலீட்டாளர்களின் நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது. திட்டமிடப்பட்ட 91,600 நபர்களுக்கான வேலைவாய்ப்பு என்ற இலக்குடன் ஒப்பிடும்போது, சுமார் 1.41 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கும் என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் உறுதியளித்துள்ளார்.
2015-ம் நிதியாண்டில் 1.90 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடையதாக இருந்த இந்தியாவின் மின்னணு பொருட்கள் உற்பத்தி கடந்த நிதியாண்டில் 11.5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில், ஆறு மடங்கு வளர்ந்துள்ளது. இந்நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 500 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய உள்நாட்டு மின்னணு உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதுதான் பிரதமரின் மோடியின் தொலைநோக்கு திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.