காசாவில் அமைதியை கொண்டு வரும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான பணிகளை மேற்கொண்ட அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, காசா பகுதியில் குண்டுவீசி தாக்குதல் நடத்துவதை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், காசாவில் அமைதியை கொண்டு வரும் முயற்சிகள் குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தை அடைந்து வருவதாகவும், அதற்குத் தலைமை வகித்து அதிபர் டிரம்ப் மேற்கொண்ட பணிகளை வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.
பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்கும் திட்டம், மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில் முன்னேற்றத்தைக் குறிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், நியாயமான முறையில், அமைதியை நோக்கி எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.