திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வாயில் பிளாஸ்டிக் கவரை அடைத்துக் குழந்தையை கடத்த முயன்ற வட மாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சின்னமோட்டூர் பகுதியில் வீட்டின் அருகே 3 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த வட மாநில இளைஞர் ஒருவர், குழந்தையின் வாயில் பிளாஸ்டிக் கவரை அடைத்துக் கடத்திச் செல்ல முயன்றார். அப்போது அருகில் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த அப்பகுதி மக்கள், இளைஞரை மடக்கி பிடித்து மரத்தில் கட்டி வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
தகவலறிந்து சென்ற போலீசார் வடமாநில இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்றதோடு, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறி ரயில் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையறிந்த அப்பகுதி மக்கள் காவல்துறை உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்த நிலையில். ரயில்வே போலீசார் உதவியுடன் மேற்கு வங்கத்திற்கு தப்பித்துச் செல்ல இருந்த வட மாநில இளைஞர் ரங்கீலாவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.