சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக, தாய்லாந்தில் மதிய நேர மதுபான விற்பனைக்கான தடையை அந்நாட்டு அரசு விலக்கி உள்ளது.
தென்கிழக்காசிய நாடான தாய்லாந்தில், தற்போது மதுபான விற்பனைக்கு இரண்டு கட்டமாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையும் மட்டுமே மதுபான கூடங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த விதியை மீறுவோருக்கு, இந்திய மதிப்பில் 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது. சுற்றுலா துறை வருவாயைப் பெரிதும் நம்பியுள்ள தாய்லாந்தில், இந்த நேரக் கட்டுப்பாடு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதனால் சுற்றுலா துறையினர் தரத் தொடங்கிய அழுத்தத்தின் காரணமாக, மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலான தடையை விலக்கிக் கொள்ள தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து தாய்லாந்து முழுவதும் காலை 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை தொடர்ச்சியாக மதுபானக் கூடங்கள் இயங்க அனுமதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தடை விலக்கு, ஆறு மாத சோதனை திட்டமாக அமல்படுத்தப்படவுள்ளது. இது அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.
















