இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பை அதனையொட்டியுள்ள நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்தவும், அதனையொட்டியுள்ள நாடுகளுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்தவும் கொழும்பு பாதுகாப்பு மாநாடு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
டெல்லியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடந்த இந்த அமைப்பின் 7வது மாநாட்டில் இலங்கை மற்றும் வங்கதேசம், மாலத்தீவு, மொரிசியஸ் ஆகிய உறுப்பு நாடுகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செஷல்ஸ் பார்வையாளர் நாடாகவும், மலேசியா விருந்தினர் நாடாகவும் பங்கேற்றன. கூட்டத்தில் பேசிய அஜித் தோவல், இந்தியப் பெருங்கடல் என்பது நமது மிகப்பெரிய பாரம்பரியம் என்றும் அதனைப் பாதுகாப்பது நமது கடமை என்றும் கூறினார்.
இந்தியப் பெருங்கடலின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை, அதனையொட்டியுள்ள நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.
















