பலூச் மக்களுக்கு எதிராகப் பாகிஸ்தான் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்துகிறது என்று பலூச் தேசிய தலைவர் மிர் யார் பலூச் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் வேண்டுமென்றே ரசாயன வெடிமருந்துகளால் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் மீது சர்வதேச இரசாயன ஆயுதத் தடைக்கான அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பாகிஸ்தானில் 44 சதவீத பரப்பளவை கொண்டுள்ள தென் மேற்கு மாகாணமான பலூச்சிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி பலுச் விடுதலைப் இராணுவத்தினர் நீண்ட காலமாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே, பலூச் மக்களுக்கு எதிராகக் கடுமையான ராணுவ நடவடிக்கைகளைப் பாகிஸ்தான் அரசு எடுத்து வருகிறது.
பாகிஸ்தான் இராணுவத்தினால் பலூச்சிஸ்தானில் மனித உரிமை மீறல்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. அத்துமீறும் பாகிஸ்தான் ராணுவம் மீது பலூச்சிஸ்தான் விடுதலை ராணுவம் தொடர்ந்து அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த மே மாதம் பலூச்சிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றிய பலூச் விடுதலை இராணுவம், அங்குள்ள அரசு அலுவலகங்களில் பாகிஸ்தான் கொடியை அகற்றிவிட்டு பலுசிஸ்தானின் தேசிய கொடியைக் ஏற்றினர். பலூச் தேசியவாதத் தலைவரும், மனித உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான மிர் யார் பலூச் தலைமையிலான “பலூசிஸ்தான் குடியரசு” தனி நாடாகப் பிரகடனம் செய்யப்பட்டது.
இனி பலுசிஸ்தானை பாகிஸ்தானின் மாகாணம் என யாரும் குறிப்பிட வேண்டாம் என்றும் தாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல என்றும் குறிப்பிட்ட மிர் யார் பலோச், பலுசிஸ்தானின் தூதரகத்தை டெல்லியில் அமைக்க இந்தியா அனுமதி தர வேண்டும் என்றும், ஐநாவும் தங்களை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
பலூச் ராணுவத்தினர் மீதும் பலூச் மக்கள் மீதும் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. தரையில் பின்னடைவுகளைச் சந்தித்த பாகிஸ்தான் ராணுவம், பலூச் மக்களை குறிவைத்து கண்மூடித்தனமாக வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், கலாட், குஜ்தார், போலன், கோஹ்லு, கஹான், சாகை, பஞ்ச்கூர் மற்றும் நோஷ்கி ஆகிய பகுதிகளில் பலூச் மக்களைக் குறிவைத்து பாகிஸ்தான் விமானப்படை பல ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாகவும், அதில் ஆபத்தான ரசாயன வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பலூச் தேசிய தலைவர் மிர் யார் பலூச் தனது எகஸ் பதிவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தாக்குதல் நடத்திய பகுதிகளில் கிடந்த குப்பைகளில் “ரசாயனத் துகள்கள்” காணப்பட்டதாகக் கூறியுள்ள மிர் யார் பலூச், 1997 முதல் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ள இரசாயன ஆயுத மாநாட்டு ஒப்பந்த மீறல் என்றும் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சட்டத்தின் கீழ் கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்ட ஒரு செயலாகப் பலூச் மக்களுக்கு எதிராகப் பாகிஸ்தான் ரசாயன மற்றும் பாஸ்பரஸ் வெடிமருந்துகளைப் பயன்படுத்துவதாகப் பலூச் ஆயுத குழுவினர் கண்டித்துள்ளனர்.
இத்தகைய ஆபத்தான ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவது, போர்க்குற்றமாகும் என்பதால் தடைசெய்யப்பட்ட ரசாயன வெடிமருந்துகளைப் பயன்படுத்தியதற்காகச் சர்வதேச நீதிமன்றங்களில் பாகிஸ்தான் மீது வழக்குத் தொடர முடியும் என்றும் கூறியுள்ளனர். ஏற்கெனவே, 2005 ஆம் ஆண்டில், முன்னாள் பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் தலைமையிலான பாகிஸ்தான் அரசு, பலுசிஸ்தானின் பல பகுதிகளில் அதிக அளவில் பாஸ்பரஸ் மற்றும் தடைசெய்யப்பட்ட இரசாயன வெடிமருந்துகளைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியது.
இந்த விதி மீறல்கள் ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ச்சியான இந்த அலட்சியமே மனித உரிமை மீறல்களுக்கும், பலூச் மக்களின் தொடர்ச்சியான இனப்படுகொலைக்கும் வழிவகுத்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
















